×

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெ. நகைகளை தமிழக அரசிடம் வழங்க வேண்டும்: கர்நாடகா அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த தங்க, வைர நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. சென்னையில் நடந்து வந்த விசாரணை, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா உள்பட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரையும் குற்றவாளியாக அறிவித்து தண்டனை விதித்தார். இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் மற்ற மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு நான்காண்டு தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த 7,040 கிராம் எடை கொண்ட 468 வகையான தங்க, வைர ஆபரணங்கள், 70 கிலோ வெள்ளி பொருட்கள், 11,344 பட்டு சேலைகள், வாட்ச் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஜ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அம்மனு நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு வக்கீலாக கிரண் எஸ்.ஜவளி நியமனம் செய்யப்பட்டு ஆஜராகி வருகிறார். இதற்கிடையில் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை அவரின் வாரிசுகளான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் ஆகியோர் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த பொருட்களின் பட்டியலை அரசு வக்கீல் கிரண் எஸ்.ஜவளி, தனி நீதிபதியிடம் தாக்கல் செய்தார். அதில் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆபரணங்களை ஏலம் விட்டு, இதில் கிடைக்கும் பணத்தில் வழக்கு செலவுக்காக கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.5 கோடியை கழித்து கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கினார். இந்நிலையில் நீதிபதி மோகன் பிறப்பித்த உத்தரவில், ‘சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் வீட்டில் பறிமுதல் செய்த சொத்துக்கள் அனைத்தும் வருமானத்திற்கு அதிகமான சொத்தில் தொடர்பு உள்ளது என்பதை தனி நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆகவே இந்த ஆபரணங்கள் அனைத்தும் முறைப்படி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆகவே கர்நாடக அரசிடம் உள்ள ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை முறைப்படி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சம் மற்றும் கர்நாடக போலீசாருக்கு உத்தரவிடுகிறேன்.

மேலும் சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்பதை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கண்டறிந்து தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்து அதன் விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கான கட்டணம் ரூ.5 கோடியை தமிழ்நாடு அரசு, வரையோலையாக கர்நாடக மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

* ஜெயலலிதா வீட்டில் 7,040 கிராம் எடை கொண்ட 468 வகையான தங்க, வைர நகைகள், 70 கிலோ வெள்ளி பொருட்கள், 11,344 பட்டு சேலைகள், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

* இந்த பொருட்களை ஏலம் விட வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

The post சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெ. நகைகளை தமிழக அரசிடம் வழங்க வேண்டும்: கர்நாடகா அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : J. JEWELLERY ,TAMIL ,COURT ,KARNATAKA GOVERNMENT ,Bangalore ,Bengaluru Special Court ,Government of Karnataka ,Government of Tamil Nadu ,Jayalalitha ,PRESIDENT ,TAMIL NADU ,J. Jewels ,Tamil government ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் கல்வி...